நடிகர் சிம்பு நடித்த மஹா படத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: தயாரிப்பாளர் பதில் தர உத்தரவு

சென்னை: நடிகர் சிம்பு நடித்த மஹா திரைப்படத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. நடிகர் சிம்பு, ஹன்சிகா நடித்த படம் மஹா. இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் இயக்குனர் ஜமீல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது இயக்குனர்  சார்பாக ஆஜரான வக்கீல், நடிகர் சிம்பு நடித்த படம்  முடியும் தருவாயில் இருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் வேறு ஒருவரை வைத்து படத்தை தயாரித்து முடித்து விட்டார் அந்த படம் தற்போது தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு ரூ.10 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு தர தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். எனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை தர தயாரிப்பாளருக்கு உத்தரவிட  வேண்டும் என்றார். அப்போது தயாரிப்பாளர் சார்பாக ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியம், இந்த படத்தின் முழு உரிமையும் தயாரிப்பாளர்களிடம்தான் உள்ளது.  எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்கக் கூடாது. இயக்குனருக்கு தர வேண்டிய சம்பள பாக்கி தொடர்பாக சமரசம் பேசி முடிவு செய்யப்பட்டு விட்டது என்றார். இதைக்கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் படம் வெளியிட தடை விதிக்க முடியாது. ரூ.10 லட்சம் நஷ்டஈடு கோரிய வழக்கில் தயாரிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறேன். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் என உத்தரவிட்டார்.

Related Stories: