சென்னை: தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பை ஏற்றதும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில்களின் வரவு -செலவு விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார். கடந்த காலங்களில் ஆண்டு வரவு -செலவு விவரங்கள் அந்தந்த கோயில்களின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும். தற்போது கோயில்களின் வரவு -செலவு கணக்குகளும் பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதில் கோயில்களில் ஆண்டுதோறும் வரக்கூடிய வருமானம், ஏற்படக்கூடிய செலவுகள், மற்றும் இருப்புகள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓரிரு நாட்களில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட உள்ளார்.