தமிழகத்தில் இருந்து கடத்தல் ரூ.2.25 கோடி கஞ்சா இலங்கையில் பறிமுதல்: 3 பேர் கைது

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்தி செல்லப்பட்ட ரூ.2.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைதாயினர். தமிழகத்திலிருந்து மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் வழியாக கஞ்சா, கடல் அட்டை உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தி செல்வது அவ்வப்போது நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் இலங்கை வடக்கு கடல் பரப்பில் இலங்கை கடலோர காவல்படையினர் ரோந்து சென்றனர். அப்போது ஊர்க்காவல்துறை வடகடல் பகுதியில் வேகமாக சென்ற பைபர் கிளாஸ் படகை துரத்தி பிடித்தனர். படகில் 6 சாக்கு மூட்டையில் 175 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதனைக் கைப்பற்றிய கடலோர காவல் படையினர் படகில் இருந்த மூன்று பேரையும் கைது செய்தனர். இதுபோல் இலங்கை வடக்கு கடல் பகுதியில் 62 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. கைப்பற்றிய மொத்த கஞ்சாவின் இலங்கை மதிப்பு ரூ.2.25 கோடி.

Related Stories: