ராஜிவ்காந்தி மருத்துவமனையில் பெண் மர்ம சாவில் திருப்பம் கொரோனா நோயாளி கொடூர கொலை: பணம், செல்போனுக்காக கொன்றதாக தற்காலிக பெண் ஊழியர் வாக்குமூலம்

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில், திடீர் திருப்பமாக பணம், செல்போனுக்காக அவர் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, மருத்துவமனையின் தற்காலிக பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டு இயங்கும் கட்டிடத்தின் 8வது தளத்தில் கடந்த வாரம் கடும் துர்நாற்றம் வீசியது.  மருத்துவமனை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பூக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த பெண் குரோம்பேட்டையை சேர்ந்த தனியார் கல்லூரி துணை பேராசிரியர் மவுலியின் மனைவி சுமிதா (41) என்பதும், மாற்றுத்திறனாளியான இவர் கடந்த மாதம் 22ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் 3வது தளத்தில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்நிலையில், மறுநாள் சுமிதா திடீரென மாயமானார். இதுபற்றி அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த மவுலி பல இடங்களிலும் அவரை தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து, கடந்த மாதம் 31ம் தேதி பூக்கடை போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனிடையே, மாயமான சுமிதா கடந்த வாரம் 8வது தளத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் அறையில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த சுமிதா, எப்படி 8வது தளத்துக்கு சென்றார், ஊழியர்கள் மட்டுமே செல்லக்கூடிய பகுதியில் அவர் எப்படி இறந்து கிடந்தார், அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் ஸ்ட்ரெச்சரில் சுமிதாவை அழைத்து செல்வது பதிவாகியிருந்தது. மேலும் சுமிதா செல்போன் காணாமல் போனதும் தெரியவந்தது.

போலீசாரின் தீவிர விசாரணையில், மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் திருவொற்றியூரை சேர்ந்த ரதி தேவி (40), சுமிதாவை ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்வது தெரிந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், சுமிதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்தனர்.

ரதி தேவி அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: கொரோனா சிகிச்சைக்காக சுமிதாவை அவரது கணவர் இங்கு அட்மிட் செய்தார். அதன் பின்னர், மனைவியை காண சரிவர வருவதில்லை. இதை பயன்படுத்தி சுமித்தாவிடம் இருந்த செல்போன், ரூ.9,500 ஆகியவற்றை திருட முயற்சித்தேன். எனவே, அவர் தூங்கும்போது, அவற்றை எடுக்க சென்றேன். அப்போது விழித்த சுமிதா என்னை பார்த்து விட்டார். இது குறித்து, மருத்துவரிடம் கூறி விடுவேன் என்று என்னை மிரட்டினார். இதனால் பயந்துபோன நான், என்னை மருத்துவரிடம் மாட்டி விடுவாரோ என்ற அச்சத்தில், அவரை கொலை செய்ய முடிவு செய்து, உங்களுக்கு ஸ்கேன் எடுக்க வேண்டுமென்று கூறி, ஸ்ட்ரெச்சரில் வைத்து 8வது மாடிக்கு அழைத்து சென்றேன்.

அங்கு மின் அறையில் வைத்து வயரால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். சுமிதா மாற்றுத்திறனாளி என்பதால், அவரால் என்னை எதிர்த்து, ஒன்றும் செய்ய முடியவில்லை. துடிதுடித்து இறந்தார். பின்னர், சடலத்தை அங்கேயே போட்டு விட்டு வந்து விட்டேன். சிசிடிவி பதிவு மூலம் போலீசில் சிக்கிவிட்டேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார். இதை தொடர்ந்து, அவரை கைது செய்து, ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர், நர்ஸ் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: