வளமான தமிழ்நாடு, மகிழும் விவசாயி, உயர்தர கல்வி, மருத்துவம் உள்ளிட்ட 7 முக்கிய இலக்குகளை அடைய உத்தரவு: கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

சென்னை: வளமான தமிழ்நாடு, மகிழும் விவசாயி, உயர்தர கல்வி, மருத்துவம் உள்ளிட்ட 7 முக்கிய இலக்குகளை அடைவதற்கு, கலெக்டர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், புதியதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா பெருந்தொற்று பரவல் என்ற நெருக்கடியான காலக்கட்டத்தில், நோய் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்று பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட  வேண்டும். அரசு சார்பாக மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை ஏராளமாக உருவாக்கி உள்ளது. படுக்கைகள் இல்லை என்ற புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தும், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை மாறி உள்ளது.

ஏராளமான தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கி உள்ளோம். ஆக்சிஜனை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பெற்று தட்டுப்பாடு இல்லாத நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வியில், வேலைவாய்ப்பில், சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள் அதிகாரத்தை, பதவியை பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும். பொது விநியோக திட்டத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும். அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும், வழங்கப்படும் உணவு பொருட்கள் சுத்தமானதாக, தரமானதாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை கவனச்சிதறல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்திடவும், அரசின் இலக்குகளை தங்களது இலக்குகளாக கொள்ள வேண்டும்.

நகர்ப்புற வளர்ச்சியும் ஊரக வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள். காலி பணியிடங்களை தகுதியானவர்களை கொண்டு நிரப்பிடவும், மாநில அரசும் ஒன்றிய அரசும் ஒதுக்கும் நிதியை முறையாக செலவு செய்து திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும். மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியவர்களோடு மாவட்ட ஆட்சி தலைவர்கள் இணைந்து பணியாற்றி, சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளித்து, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். தனது அரசு உத்தரவு போடும் அரசு மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் காது கொடுத்து கேட்கும் அரசு.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வளம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களை வரவேற்று பேசியபோது, வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு! மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி! குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்! அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்! எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்! உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்! அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!  ஆகிய 7 இலக்குகளை பத்தாண்டு காலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சி தலைவர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என தெரிவித்தார்.

* பொது விநியோக திட்டத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும்.

* அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும், வழங்கப்படும் உணவு பொருட்கள் சுத்தமானதாக, தரமானதாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

* மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது  உடனடி நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை கவனச்சிதறல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்திடவும், அரசின் இலக்குகளை தங்களது இலக்குகளாக கொள்ள வேண்டும்.

Related Stories: