தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு இல்லை!: அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்..!!

கரூர்: தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு தேவைப்படாது என்று அமைச்சர் கூறியுள்ளார். 

கரூரில் குடும்ப அட்டை தாரர்களுக்கு 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் கட்டணம் செலுத்த ஏற்கனவே போதுமான அவகாசம் வழங்கியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 

மே 10ம் தேதி முதல் மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த இன்றே கடைசி நாள் என்றும் அமைச்சர் கூறினார். சிறுகுறு தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின்சார கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் மே 31ம் தேதி நிறைவடைந்த நிலையில், அதனை ஜூன் 15ம் தேதி வரை நீட்டித்து தமிழக மின்சாரத்துறை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: