10 ஆண்டுக்கு மேல் இயங்கினால் நிரந்தர அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் ஆவன செய்ய தனியார் பள்ளிகள் கோரிக்கை

சென்னை: பத்து ஆண்டுக்கு மேல் இயங்கும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தனியார் பள்ளிகளின் 10 கோரிக்கைகளுக்கு  உரிய ஆணை பிறப்பிக்க ஆவன செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு  தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.  தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இளங்கோவன், முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கினார். பின்னர், அவர் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில்  கூறியிருப்பதாவது:   பள்ளி வாகனங்களுக்கான வரி மற்றும் இன்சூரன்ஸ், பள்ளி கட்டிடங்களுக்கான சொத்துவரி, மின்சார கட்டணம் போன்ற கட்டணங்களை செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். பள்ளி பேருந்துகளின் முடிவுற்ற தகுதிச் சான்றை ஒரு வருட காலத்திற்கு நீட்டித்து ஆணை வழங்க ஆவன செய்ய வேண்டும்.

 தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு ஏற்கனவே சென்ற ஆண்டுகளில் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கல்விக் கட்டணத்திலிருந்து ஆண்டுக்கு 15% உயர்த்தி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வரும் 3 ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யவும் மேலும் தற்போதைய கட்டண நிர்ணய குழுவில் மெட்ரிக் பள்ளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் கல்வி கட்டண நிர்ணயத்தில் பல்வேறு குறைபாடுகள் ஏற்படுவதால்  ஆசிரியர் கல்வியியல் கல்லூரிக்கான கட்டண நிர்ணயக் குழுவில் கல்லூரி தாளாளர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதைபோல் கமிட்டியில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பிற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

 எந்த சூழ்நிலையிலும் மாற்றுச் சான்றிதழ்கள் இல்லாமல் எந்த வகையான பள்ளியிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட கூடாது. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பள்ளிகளின் தொடர் அங்கீகார ஆணைகள் முடிவடைந்த பள்ளிகளுக்கு எந்தவித விண்ணப்பங்களும் இன்றி மூன்று வருடங்களுக்கு புதுப்பித்து  வழங்கவும் மேலும் பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட 10 கோரிக்கைகள் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: