திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தலா 1,000 வழங்கினார். தமிழக பள்ளிக்கல்வித் துறை ஜூன் 18ம் தேதி முதல் பள்ளிகளைத் திறந்து மாணவர் சேர்க்கை, மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி, விலையில்லா பாடப்புத்தகம் வழங்கல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை தலைமை ஆசிரியர்களைக் கொண்டு நடத்த உத்தரவிட்டிருந்தது. இதன்படி விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மகேஸ்வரி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அப்போது புதிதாக முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட நூல்களுடன், தனது சொந்த செலவில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் 1000 வழங்கினார்.