அடுத்த புதிய வகை கொரோனா `டெல்டா பிளஸ்’ வைரஸ் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் முதன்முறையாக 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மரபணு மாற்றம் அடைந்து பரவிய பி.1.617.2 கொரோனா வைரஸ் வகைக்கு டெல்டா வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அதிக ஆபத்தானதான ஒரு வகையாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவுவதற்கு, டெல்டா வகை கொரோனாவே காரணமாக அமைந்தது.  தற்போது 2வது அலை குறைந்தாலும், 3வது அலை ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், டெல்டாவைப் போலவே அதிக ஆபத்துள்ள ‘டெல்டா பிளஸ்’ எனும் புதிய வகை வைரஸ் இந்தியாவில் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆரின் ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவன விஞ்ஞானி தனது டிவிட்டர் பதிவில், ‘‘பி.1.617.2 டெல்டா வகை கொரோனா புதிய கே417என் உடன் மரபணு மாற்றம் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பி.1.617.2.1 அல்லது ஏஒய்.1 என்று மரபணு மாற்றமடைந்த  டெல்டா வகை கொரோனாவிற்கு டெல்டா பிளஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை 6 பேரிடம் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் அடைந்த இவ்வகை கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்திகளை முறியடித்து விட கூடியது. இது கேசிரிவிமாப், இம்டெவிமாப் ஆகிய இரண்டு மருந்துகளின் கலவை மருந்துகளுக்கு கட்டுப்படுகிறது. இதனால் இந்த மருந்துகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது’’ என கூறியுள்ளார்.

Related Stories: