புதுடெல்லி: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், தடுப்பூசி கண்டு பிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் மற்றும் மருந்து நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள போதிலும் இன்னும் அதிகமான தடுப்பூசிகள் தேவை உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நோவாவாக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி 90% செயல்திறன் கொண்டதாக பரிசோ தனையில் நிரூபணமாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள 119 தளங்களில் 18 வயதுக்கும் மேற்பட்ட 29,960 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தடுப்பூசியின் ஒட்டு மொத்த செயல்திறன் 90%, மிதமான மற்றும் கடுமையான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு 100%, பல்வேறு வகையான வைரசுக்கு எதிரான செயல்திறன் 93%, அதிக ஆபத்து நிறைந்த மக்கள்தொகையில் செயல்திறன் 91% என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நோவாவாக்ஸ் தலைமை நிர்வாகி ஸ்டான்லி ஈர்க் கூறுகையில், ‘‘செப்டம்பர் இறுதிக்குள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற இடங்களில் அங்கீகாரம் பெற திட்டமிட்டுள்ளோம். அதற்குள் ஒரு மாதத்திற்கு 10 கோடி டோஸ் வரை உற்பத்தி செய்ய முடியும்’’ என்றார்.