முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்: சபாநாயகர் தொடர்ந்த வழக்குகள் ஐகோர்ட்டில் வாபஸ்

சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம்  செயல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த அப்பாவு புகார் அளித்திருந்தார். அதேபோல, ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ ரேசன் அரிசி கூடுதலாக வழங்க மத்திய அரசு அறிவித்த நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கிவிட்டு, மீதமுள்ள அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி விற்பனை செய்ததாக, அப்போதைய அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் புகார் அளித்திருந்தார்.ஆளுநரின் ஒப்புதலை பெற்று வழக்கு பதிய உத்தரவிடக் கோரி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளை தொடர்ந்திருந்தார். அதேபோல, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த  பொதுத்துறை செயலாளர் அனுமதி பெற வேண்டும் என்ற 2018ம் ஆண்டு அரசாணையை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்த்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகாரை விரிவாக விசாரித்த தலைமை செயலாளர் புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என்று முடிவெடுத்து புகாரை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அப்பாவு தரப்பில் ஆஜரான வக்கீல், அப்பாவு சபாநாயகராக தேர்வாகியுள்ளதால் அவர் தொடர்ந்த 3 வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: