சென்னை: திருவாரூர் மாவட்டம் தலையமங்கலத்தை சேர்ந்த அமிர்தவள்ளி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி அவாஜ் யோஜனா மற்றும் ஸ்வச் பாரத் திட்டத்தின்கீழ் தலையமங்கலம் கிராமத்திற்கு 144 வீடுகளும் 433 கழிவறைகளும் கட்டுவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. தலையமங்கலம் பஞ்சாயத்து செயலாளராக ராஜ்மோகன் என்பவரை தமிழக அரசு நியமித்தது. ராஜ்மோகனின் தம்பியான மேலக்காட்டை சேர்ந்த பாஸ்கருக்கு வீடுகள் மற்றும் கழிவறைகளை கட்டும் பணியை ஒப்பந்த விதிகளை எதுவும் கடைபிடிக்கப்படாமல் கொடுத்தனர். எந்த கட்டுமானத்தையும் செய்யாமல் போலியான ஆவணங்களை தயார் செய்து திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் ₹5 கோடிவரை முறைகேடு செய்துள்ளனர். இந்த மோசடி குறித்து விசாரிக்க பொன்னியின் செல்வன் என்பவரை திருவாரூர் கலெக்டர் நியமித்தார். அவரும் கலெக்டருக்கு அறிக்கை அளித்தார். ஆனால், அந்த அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.