சென்னை: தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தற்போது தென் மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக குறைந்த காற்றழுத்தம் ஒன்று உருவானது. அது தற்போது வலுப்பெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இது தவிர நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று அந்த மாவட்டங்களில் மழை பெய்தது.