போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 ‘சிமி’ கைதிகள் தடுப்பூசி போட மறுப்பு: சிறை துணை கண்காணிப்பாளர் தகவல்

போபால்: போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 சிமி தீவிரவாத அமைப்பின் கைதிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து வருவதாக சிறையின் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பிரசாரம் தீவிரமாகி வரும் நிலையில், மத்திய, கிளைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபால் சிறை நிர்வாகத்திற்கு, கைதிகளுக்கு தடுப்பூசி போடுவதில் ஒரு சவாலை சந்தித்துள்ளனர். போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 சிமி (தீவிரவாத அமைப்பு) கைதிகள், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துவிட்டனர்.

இந்த கைதிகள் அனைவரும், தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட மிகக் கடுமையான வழக்குகளின் கீழ் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து போபால் சிறை துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷன் வஸ்தவா கூறுகையில், ‘சிறையில் கைதிகளிடையே அதிக இடைவெளி உள்ளது. அதேநேரம் சிறையின் குறிப்பிட்ட  இடத்தில் மட்டுமே கைதி இருந்தாக வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால், போபால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 1,278 கைதிகளுக்கு ஏப்ரலிலும், 2,219 பேருக்கு மே மாதத்திலும் தடுப்பூசி போடப்பட்டது.

ஆனால் சிமி அமைப்பின் 28 கைதிகளில், 23 கைதிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துவிட்டனர். அதேநேரம், சஃப்தார் நாகோரி உட்பட 5 சிமி கைதிகள் போட்டுக் கொண்டனர். மீதமுள்ள சிமி கைதிகள் தங்களது மத கோட்பாட்டின்படி தடுப்பூசியை போட்டுக் கொள்ள மறுத்துவிட்டனர். அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குகிறோம். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சக சிமி கைதிகள், தடுப்பூசியை போட மறுக்கும் மற்ற சிமி கைதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தும் அவர்கள், இப்போதைக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்’ என்றார்.

Related Stories: