சசிகலாவுடன் பேசிய 15 அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்... பாமகவை விமர்சித்த பெங்களூரு புகழேந்தியும் கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியை (பா.ம.க.வை) கடுமையாக விமர்சித்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்ச்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர்.அண்மையில் பேசிய  பாமகவின் இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி,யுமான அன்புமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை; பா.ம.க. மட்டும் கூட்டணியில் இல்லாமல் இருந்தால் அதிமுக 20 இடங்களில் கூட ஜெயித்திருக்காது என விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளரான பெங்களூரு புகழேந்தி, பாமகவுக்கு 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு இருக்கிறது. ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் அன்புமணி, ராஜ்யசபா எம்.பி.யாகி இருக்கிறார் என தெரிவித்தார். இதனால் அதிமுக- பாமக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அதிமுக செய்தி தொடர்பாளர், கழக புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் புகழேந்தி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுகொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: