×

தெரு விலங்குகளுக்கு உணவளிக்க நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு : பாராட்டி தள்ளிய உயர் நீதிமன்றம்

சென்னை : தெரு விலங்குகளுக்கு உணவளிக்க ஆளுநர் 10 லட்ச ரூபாய் நிதி வழங்கியதற்கும், தமிழக அரசு 9 லட்ச 20 ஆயிரம் ரூபாய் விடுவித்ததற்கும் நீதிபதிகள் பாராட்டுகளை தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தெரு விலங்குகளுக்கு உணவளிக்க  ஆளுநர் 10 லட்ச ரூபாய் நிதி வழங்கியதற்கும், தமிழ்நாடு அரசு 9.20 லட்சம் ரூபாய் நிதி விடுவித்ததற்கும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.தொடர்ந்து, எதிர்வரும் நாட்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அப்போது தெரு விலங்குகளுக்கு தடையில்லாமல் உணவு கிடைப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் தெருவிலங்குகளின் பாதுகாப்பிற்கும், நாய்களுக்கான கருத்தடை நடைமுறையையும் மனிதாபிமான அடிப்படையில் செய்வதற்கும் திட்டம் வகுக்க வேண்டுமென நீதிபதிகள் வலியுறுத்தினர். தனியார் மூலம் யானைகள் வளர்ப்பதை முழுமையாக தடை விதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து எதிர்காலத்தில் நீதிமன்றம் பரிசீலிக்கும் என தெரிவித்த நீதிபதிகள், அதுவரை அவை கண்ணியமாகவும், மனிதாபிமானமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஊரடங்கால் தெரு விலங்குகள் உணவில்லாமல் பாதிக்கப்பட்டதால் தொடரப்பட்ட இந்த வழக்கின் நோக்கம் நிறைவேறியுள்ளதாக தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Government of Tamil Nadu ,Court , தெரு விலங்கு
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...