தலைவர்கள், பெண் பத்திரிகையாளர்களை விமர்சித்த மிரட்டல் ஆசாமி கிஷோர் கைது

சென்னை: மூத்த தலைவர்களையும், பெண் பத்திரிகையாளர்களையும் கடுமையாகவும், ஆபாசமாகவும் விமர்சனம் செய்த மிரட்டல் ஆசாமி கிஷோர் கே.சாமியை சென்னை போலீசார் இன்று காலையில் கைது செய்தனர். சமூக வலைத்தளங்களில் மூத்த தலைவர்களைப் பற்றி தரம் குறைந்த வகையில் விமர்சித்து வருபவர் கிஷோர் கே.சாமி. ஒருமையில் பேசுவது, பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். தனக்கு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக ஆளும் கட்சியின் பின்னால் ஒளிந்து கொள்ளும் பழக்கம் கொண்டவர். கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதுபோல நடந்து கொண்டு, ஆளும் கட்சியை விமர்சிக்கும் தலைவர்களை ஒருமையில் பேசி வந்தார்.

இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10 ம் தேதி சங்கர் நகர் போலீசில் புகார் அளித்தார். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சகராக இருக்கும் கிஷோர் கே.சாமி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தும், அக்கட்சியின் தலைவர்களையும் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக ஐடி பிரிவு சார்பில் அளித்த புகாரினை அடுத்து கிஷோர் கே சாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

153 - கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல்,  505(1)( தீ)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (நீ) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என 3 பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில் கடந்த மே 2ம் தேதி திமுக வெற்றி பெற்ற அன்று, தன்னை காவல்துறை கைது செய்யலாம் என்று கே.கே.நகரில் உள்ள தன்னுடைய வீட்டு முகவரியை கொடுத்து, காவல்துறையை வரவேற்க தயார் என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தலையில் போலீசார் இன்று காலையில் கிஷோரை கைது செய்தனர்.

பின்னர் அவர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 28- ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, கிஷோர் கே சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்க உத்தவிட்டார். இந்நிலையில் சைதாபேட்டை சிறையில் போதிய இட வசதி இல்லாததால் காரணத்தால் செங்கல்பட்டு மாவட்ட  சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: