ஜவ்வாது மலை பகுதியில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

போளூர் : ஜவ்வாது மலை பகுதிகளில் சாராயம் காய்ச்சுவதாக, போளூர் வனச்சரக அலுவலர் குணசேகரனுக்கு கிடைத்த தகவலின்பேரில், வனவர்கள் ராஜேஷ், சாந்தகுமார், ஏழுமலை மற்றும் வனக்காப்பாளர்கள் மேல்பட்டு வனச்சரகம் பெரிய கீழ்பட்டு கிராமம் அருகே தென்மலை காப்புகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த நபர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, அங்கிருந்த 1,000 லிட்டர் சாராய ஊறல், அடுப்புகள் மற்றும் மூலப்பொருட்களை வனத்துறையினர் கைப்பற்றி அழித்தனர். மேலும், தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

ஜமுனாமரத்தூர் வனச்சரகம், வீரப்பனூர் காப்புக்காடு, அரசவள்ளி முதல் முள்ளுவாடி செல்லும் வழி சரகத்தில், செங்கம் கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் வனவர்கள் கணேஷ், பாண்டுரங்கன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, முள்ளுவாடி கிராமத்தை சேர்ந்த ரகுபதி(30), சிவக்குமார்(27) ஆகியோருக்கு சொந்தமான  இடத்தில் பதுக்கி வைத்திருந்த 40 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 30 கிலோ வெல்லம் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். தொடர்ந்து, ரகுபதி, சிவக்குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: