தடுப்பூசி போடும் முகாம்களில் ஆர்வத்துடன் திரளும் பொதுமக்கள்!: மதுரையில் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருப்பு..!!

மதுரை: தடுப்பூசி போடுவதற்கு மாநிலம் முழுவதும் மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மதுரை இளங்கோ மேல்நிலை பள்ளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. இந்த தடுப்பூசி போடுவதற்கு மாநிலம் முழுவதும் மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனினும் மத்திய அரசு தேவையான தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு வழங்காததால் தடுப்பூசி போடும் பணிகளில் ஆங்காங்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மதுரையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மதுரை இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். மதுரையில் 19 ஆயிரம் தடுப்பு மருந்துகள் இருப்புள்ள நிலையில், மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பல்வேறு பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு வருகிறார்கள். 

நேற்று முன்தினம் மாவட்டத்தின் 33 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், நேற்று போடப்படவில்லை. ஆனால் இன்று நாகர்கோவில், புத்தேரி, கார்மில் மேல்நிலைப்பள்ளி உட்பட 22 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அதிகாலையிலேயே ஏராளமான மக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் குவிந்து ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு வருகிறார்கள். நாமக்கல் நகரில் கோட்டை சாலையில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இந்நிலையில் இன்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்தனர். ஆனால் தற்சமயம் தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் - ஐ பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அமைதியாக கலைந்துபோக செய்தனர். 

Related Stories: