தொழில்நுட்பங்களை கடைபிடித்து நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்-வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை

புதுக்கோட்டை : நிலக்கடலைச் சாகுபடித் தொழில்நுட்பங்கள் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டுமென வேளாண்மை இணை இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நிலக்கடலைச் சாகுபடியின்போது கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்துப் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

நிலக்கடலையில் வேரழுகல், தண்டழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்ஆகியவற்றைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒன்று முதல் இரண்டு மணிநேரம் வரை விதைகளை நிழலில் உலர்த்தி 24 மணிநேரத்திற்குள் விதைக்க வேண்டும். நிலக்கடலை விதை நேர்த்தி செய்யும்போது விதையின் மேல்தோல் உரியாமல் கவனமாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதையுறையில் பாதிப்பு ஏற்படின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். விதைக்கும்போது விதைகளை வரிசைக்கு வரிசை 30 செமீட்டரும், செடிக்கு செடி 10 செமீ இடைவெளியும் விட்டு நிலத்தில் 4 செ.மீ. ஆழத்திற்கு மிகாமல் விதைக்க வேண்டும்நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற ஊட்டச்சத்து மேலாண்மை இன்றியமையாதது.

ஒரு ஏக்கருக்கு ஐந்து டன் தொழுஉரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் உரத்தினை இட்டு நன்கு உழவு செய்ய வேண்டும். பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து மடக்கி உழவு செய்வதன் மூலம் மண் வளத்தை அதிகரிக்கலாம். ரசாயன உரம் மண்பரிசோதனை செய்து அதனடிப்படையில் உரமிடுவதே சிறந்தது. மண்ணாய்வு செய்யவியலாத நிலையில் பொதுப் பரிந்துரையாக இறவைப் பயிருக்கு ஏக்கருக்கு யூரியா 22 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 16 கிலோ இடலாம். மானாவாரி எனில் முறையே 11 கிலோ, 62 கிலோ மற்றம் 8 கிலோ இடவேண்டும். சுண்ணாம்பு மற்றும் கந்தகச் சத்துக்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 80 கிலோ ஜிப்சம் அடியுரமாக இட வேண்டும்.

 நிலக்கடலையை விதைத்தவுடன் நிலத்தில் ஈரம் இருக்கும் நிலையில் களை முளைக்கும்முன் தெளிக்கும் களைக்கொல்லிகளான பென்டிமெத்தலின் 30 இ.சி. 400 மி.லி அல்லது ஆக்சிபுளுர்பென் 80 கிராம் ஆகிய இவற்றுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் களைகளைக் கட்டுப்படுத்தலாம். களை முளைக்கும்முன் தெளிக்க வேண்டிய களைக்கொல்லியைத் தெளிக்காத நிலையில், களைகளைப் பொறுத்து விதைத்த 20-25ம் நாள் களை முளைத்த பின்னர் தெளிக்கும் களைக்கொல்லிகளான இமாசிதபைர் 250 மி.லி., ஏக்கருக்கு தெளித்துக் கட்டுப்படுத்தலாம். களைக்கொல்லி தெளிக்கவில்லை எனில் விதைத்த 20ஆம் நாளிலும் 45ஆம் நாளிலும் ஆட்களை வைத்துக் கைக்களை எடுக்க வேண்டும்.

நுண்ணீர் பாசனம்:

​நிலக்கடலை சாகுபடியில் நீர் சிக்கனத்தை கடைபிடித்திட விவசாயிகள் சொட்டு நீர்பாசனம் அல்லது தெளிப்புநீர் பாசனம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்தில் நிலக்கடலை சாகுபடி செய்வதானல் நீர் பாசனம், உரமிடுதல் ஆகியவை எளிதாகிறது. மேலும் நீர் சிக்கனம் கடைபிடிப்பததினால் கூடுதல் சாகுபடி பரப்பு மேற்கொள்ள ஏதுவாகிறது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.எனவே புதுக்கோட்டை மாவட்ட நிலக்கடலை சாகுபடியாளர்கள் மேற்கண்ட தொழில்நுட்பங்களை முறையாகக் கடைப்பிடித்து நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற்று பயன் பெறுமாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: