62 ஏக்கரில் பிரமாண்டமாக அமைகிறது ஏழுமலையான் கோயில் கட்ட ஜம்மு காஷ்மீரில் பூமி பூஜை: 18 மாதங்களில் முடிக்க இலக்கு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. திருப்பதியில் உள்ள உலக புகழ் பெற்ற ஏழுமலையான் கோயிலை நிர்வாகம் செய்து வரும் திருப்பதி தேவஸ்தானம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஏழுமலையானுக்கு புதிய கோயில்களை கட்டுகிறது. இதன்படி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் பிரமாண்ட வகையில் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இதற்கான, ஜம்மு அருகே உள்ள மஜீன் என்ற கிராமத்தில் 62 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்துக்கு 40 ஆண்டுகளுக்கு ஜம்மு காஷமீர் நிர்வாகம் குத்தகைக்கு அளித்துள்ளது. இங்கு ரூ.62 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் பிரமாண்ட கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதில், மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மிர் ஆளுநர் மனோஜ் சின்கா, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, ஆந்திராவை சேர்ந்த எம்பி, எம்எல்ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கோயில் கட்டுமான பணிகள் அனைத்தையும் 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

* 22 முதல் ஜேஷ்டாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிலைகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக மூலிகை திரவியங்களால் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் வருகிற 22ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த அபிஷேகம் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் பவுர்ணமியன்று நிறைவு பெறும். அதன்படி, ரங்கநாதர் மண்டபத்தில் வரும் 22ம் தேதி காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்கக்கவசம் அகற்றப்படும். பின்னர் பால், தயிர், தேன், இளநீர் உட்பட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்படும். மேலும், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம்  செய்யப்படும். அன்று மாலை வைர கவசம் அணிவிக்கப்பட்டு 4 மாடவீதியில் சுவாமி வீதி உலா நடைபெறும். 2வது நாளான 23ம் தேதி முத்து கவசமும், 3வது நாளான 24ம் தேதி மாலை உற்சவர்களுக்கு மீண்டும் தங்க கவசம் அணிவிக்கப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: