அம்பேத்கரை கூட பாக். ஆதரவாளர் என்பார்கள்: மெகபூபா முப்தி ஆவேசம்

ஸ்ரீநகர்:  காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங் சமீபத்தில் பாகிஸ்தான் பத்திரிகையாளருடன் சமூக வலைதளமான ‘கிளப் ஹவுஸ்’ மூலம் உரையாடினார். அப்போது ‘காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் துயரம் தருவதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 370 ஏ மீண்டும் கொண்டு வரப்படும்’ என்றும் கூறினார். திக்விஜய் சிங்கின் இந்த கருத்துக்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. ‘காங்கிரசின் இதயம் பாகிஸ்தானுக்காகவே துடிக்கிறது’ என்று ஜம்மு காஷ்மீர் மாநில தலைவர் கடுமையாக விமர்சித்தார். இந்த சர்ச்சை பற்றி ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. அந்த சட்டத்தையே 2019ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. நல்ல வேளையாக அம்பேத்கர் உயிருடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவரையும் பாகிஸ்தான் ஆதரவாளர் என்ற முத்திரையை பாஜ.வினர் குத்தியிருப்பார்கள்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: