மீனவர்களுக்கு மானிய டீசலை உயர்த்த வேண்டும்: அரசுக்கு ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

சென்னை: மீனவர்களுக்கு மானிய டீசல் அளவை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மீன் மொத்த வியாபாரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, சில்லரை வியாபாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. சில்லரை வியாபாரத்தால் சாதாரண சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்படும். அதோடு ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையிலும் மீன்கள் கிடைக்கும். ஆதலால் தமிழக அரசு சில்¢லரை மீன் விற்பனைக்கு அதிகமாக அனுமதி அளித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். தமிழக அரசால், விசைப்படகுகளுக்கு 1,800 லிட்டரும், நாட்டுப்படகிற்கு 350 லிட்டரும் டீசல் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது போதுமானதாக இல்லை. ஆகவே தமிழக அரசு விசைப்படகுகளுக்கு மாதந்தோறும் 5,000 லிட்டரும், நாட்டுப்படகுகளுக்கு 600 லிட்டர் டீசல் மானிய விலையில் அளிக்க வேண்டும் என்று மீனவர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு மீனவர்களின் இந்த வேண்டுகோளை பரிசீலனை செய்து ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: