சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபடும் முக்கிய ரவுடிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னை: சென்னையில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் முன்பு அதிகளவில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டாஸ்மாக் கடைகள் முன்பு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டும் மது பாட்டில்கள் விற்பனை செய்வது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது.

தொடர்ந்து, பெரியமேடு, எழும்பூர், ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து நேரில் ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு காரணமாக சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு கூட்டம் கூடக்கூடாது. மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்படுவர். அதிகளவில் டாஸ்மாக் கடைகள் முன்பு கூட்டம் கூடினால் அவர்களை ஒரு இடத்தில் நிறுத்தி வைத்து சமூக இடைவெளியுடன் மதுவாங்க அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருடன் கடையின் விற்பனையாளர்கள் 2 பேர் பணியில் ஈடுபடுவார்கள். ஒலிப்பெருக்கு மூலம் அடிக்கடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும். அனைத்து கடைகள் முன்பும் தடுப்புகள் அமைக்கப்படும்.

முத்தியால்பேட்டை சரித்திர பதிவேடு ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை, ஆர்.கே.நகர் போலீசார் விழுப்புரத்தில் கைது செய்துள்ளனர். இவர், ஏ பிளஸ் ரவுடி. அவரிடம் இருந்து பட்டாக்கத்தி, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் முக்கிய ரவுடிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். யார் பிரச்னைக்குள்ள ஆள், கோஷ்டி மோதலில் ஈடுபடும் நபர்கள் யார் என்பது குறித்து பட்டியல் எடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். யு டியூபர் மதன் விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவில் அதற்கு தனி பிரிவு இருக்கிறது. இதுதொடர்பாக எங்கள் கவனத்திற்கு வந்து இருக்கிறது. அது தொடர்பாக சட்ட நிபுணர்கள் ஆலோசனைக்கு பிறகு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: