முதலமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியிலிருந்து பெண் போலீசாருக்கு விலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலை தொடர்ந்து டிஜிபி அதிரடி உத்தரவு

சென்னை: முதலமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பாதுகாப்பு பணியின்போது சாலைகளில் பல மணி நேரம் பெண் காவலர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் குடிக்க தண்ணீர் இன்றியும், இயற்கை உபாதைகள் கழிக்க வசதியின்றியும், சில நேரங்களில் கர்ப்பிணி காவலர்கள் அவதிப்படுகின்றனர். இதையடுத்து பெண் காலவர்கள் உடல் ரீதியாக பல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். தற்போது கொரோனா காலத்தில் பெண் காவலர்கள் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பெண் காவலர்களின் பாதிப்பை உணர்ந்த தமிழக முதல்வர் தனது பாதுகாப்பு பணியில் இனி பெண் காவலர்களை பணியமர்த்த வேண்டாம் என்றும், முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது கூட சாலையோரங்களில் நீண்ட நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட பெண் காவலர்களை நியமிக்க வேண்டாம் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டார்.அதைதொடார்ந்து காவல் துறை டிஜிபி திரிபாதி அனைத்து மண்டல ஐஜிக்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சுற்றிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில், முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணத்தின்போது பாதுகாப்பு பணியில் இனி பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம். அவர்களுக்கு இலகுவான பணிகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: