தேநீர் கடைகளுக்கு அனுமதி - பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கடந்த 31-5-2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் நோய் பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டா மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில் தளர்வுகள் சற்று விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் 14-6-2021 முதல் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

பொது மக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இ-சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.

கட்டுமான பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமான பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணி தேவைகளை கருத்தில் கொண்டு கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

Related Stories: