×

மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி; நாளை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை  அரசு வெளியிட்டுள்ளது. மதுக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா முன்னெச்சரிகை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற  வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் தமிழக அரசு கூறியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 


தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது. 


மொத்தமாக மதுபானங்களை யாருக்கும் விற்க கூடாது. சில்லறையாக தான் விற்க வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. மதுபானம் வாங்க வருவோர் 6 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும். கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். பணியாளர்கள், மதுபானம் வாங்க வருவோரை சமூக இடைவெளியுடன் வாங்குமாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



Tags : TN Government , In 27 districts, liquor stores, opening, Government of Tamil Nadu
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது