பட்டப்பகலில் பயங்கரம்: தொழிலாளி ஓடஓட வெட்டிக்கொலை

பல்லாவரம்: குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், பஜனைகோயில் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (36). கூலி தொழிலாளி. நேற்று மதியம் தனசேகர், வேலை முடிந்து, தனது நண்பர் தண்டபாணியுடன் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டின் அருகே வந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள், திடீரென பயங்கர ஆயுதங்களுடன் தனசேகரை நோக்கி ஓடிவந்தனர். இதனை கண்ட அவர்,  பைக்கை சாலை ஓரம் நிறுத்திவிட்டு, அருகில் இருந்த காலி மைதானத்துக்கு நண்பருடன் ஓடினார். ஆனால் மர்மநபர்கள், அவரை விரட்டி சென்று, சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கை, கால் உள்பட உடல் முழுவதும் படுகாயமடைந்த தனசேகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள், அங்கிருந்து தப்பிசென்றனர்.

தகவலறிந்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடந்த 2018ம் ஆண்டு இதே பகுதியில் முன்விரோதம் காரணமாக ரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் தனசேகர் கைது செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக தற்போது தனசேகரை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், தப்பியோடிய மர்மநபர்களை, 3 தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர்.

Related Stories: