கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் போடுவதற்கான இடைவெளியில் மாற்றமில்லை: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: `கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் போடுவதற்கான கால இடைவெளியில் எவ்வித மாற்றமும் இல்லை,’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  ‘இந்தியாவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க உள்ளிட்ட நாடுகளின் உருமாறிய வைரஸ் பரவி வருவதால், 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை உடனடியாக குறைக்க வேண்டும்,’ என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துக்கான நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் போடுவதற்கான கால இடைவெளியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது பற்றி, முறையான அறிவியல் ஆய்வுகளுக்கு பின்னரே முடிவு எடுக்கப்பட வேண்டும். எனவே, தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியில் மாற்றம் கொண்டு வருவது பற்றி மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

அதே நேரம், 2வது தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை அதிகரித்தால், ஏராளமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி கிடைக்கும். இதன் மூலம், அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிகம் பேர் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்,’’ என்றார்.

Related Stories: