ஜூசில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து பஸ் கண்டக்டர் கொடூர கொலை: ஆண் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து காதலி வெறிச்செயல்

சேலம்: சேலத்தில் 2 ஆண் நண்பர்களுடன் சேர்ந்து, பழரசத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து தனியார் பஸ் கண்டக்டரை கொடூரமாக அவரது கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே மல்லமூப்பம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (49). தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி புஷ்பா, 27 வயது மகனும் உண்டு. 20 ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் மனைவியை விட்டு பிரிந்து தளவாய்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். விழுப்புரத்தை சேர்ந்தவர் சித்ரா. இவர் சேலம் தளவாய்பட்டியில் தங்கி இஎஸ்ஐ மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவரது மகள் சர்வேஸ்வரி (35). இவர் கணவரை பிரிந்து தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சர்வேஸ்வரியுடன் கண்டக்டர் சுப்பிரமணிக்கு பழக்கம் ஏற்பட்டு, குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே, சர்வேஸ்வரியின் சகோதரி உமாமகேஸ்வரி(37), கணவரை பிரிந்து 17 வயது மகளுடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

அவருடனும் சுப்பிரமணிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுதெரிந்து சர்வேஸ்வரி தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். உமாமகேஸ்வரியும், சுப்பிரமணியும் தனியாக குடும்பம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சுப்பிரமணி வீட்டில் உள்ள கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உறவினர்கள் வந்து பார்த்தபோது, அவர் ெகாலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. புகாரின்படி இரும்பாலை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், சுப்பிரமணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்து ஆய்வு செய்ததில், வீட்டுக்கு 2 ஆண்கள் உமா மகேஸ்வரியுடன் சென்று வந்தது தெரிந்தது. இதையடுத்து உமாமகேஸ்வரியை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகின.  உமா மகேஸ்வரிக்கு வேறு சில ஆண்களிடமும் பழக்கம் இருந்ததை அறிந்து சுப்பிரமணி கண்டித்துள்ளார்.

அடித்தும் துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், சுப்பிரமணி உயிரோடு இருந்தால், இஷ்டப்படி சந்தோஷமாக இருக்க முடியாது என நினைத்து, 2 ஆண் நண்பர்களான செங்காட்டூரை சேர்ந்த நாகராஜன், கண்ணன் ஆகியோரை வைத்து சுப்பிரமணியை ெகாலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக சுப்பிரமணிக்கு சாத்துக்குடி பழ ரசத்தில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும், சுப்பிரமணி கட்டிலில் மயங்கி கிடந்தார். பின்னர் 2 நண்பர்களையும் வீட்டிற்கு வரவழைத்து, சுப்பிரமணியின் கை, கால்களை இறுக்கி பிடித்து தலையணையால் முகத்தை அமுக்கியும், கழுத்தை நெரித்தும், மர்ம உறுப்பை நசுக்கியும் கொலை செய்துள்ளனர். நண்பர்கள் சென்றபிறகு, உமாமகேஸ்வரி வீட்டில் இருந்தபடியே சுப்பிரமணி பேச்சு மூச்சு இன்றி கிடப்பதாக, பெற்றோர், உறவினர்கள் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து உமாமகேஸ்வரி, அவரது நண்பர்கள் நாகராஜன், கண்ணனை கைது செய்தனர்.

Related Stories: