நாட்டை விட்டு ஓடி விடுவார் டொமினிகா நீதிமன்றத்தில் சோக்சிக்கு ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: டொமினிகா நாட்டு உயர் நீதிமன்றத்தில் மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாட்டு தப்பிய பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவருடைய உறவினர் மெகுல் சோக்தியை இந்தியாவுக்கு நாடு கடத்தி வந்து விசாரிப்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான முயற்சியில் சிபிஐ, அமலாக்கத் துறை போன்றவை ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், ஆன்டிகுவா நாட்டு குடியுரிமையை பெற்று வசித்து வந்த மெகுல் சோக்சி, கடந்த மாதம் 23ம் தேதி டொமினிகா நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவரை அங்கிருந்து நாடு கடத்தி வருவதற்காக சிறப்பு விமானத்தில் சென்ற சிபிஐ குழு, நீதிமன்ற விசாரணை தாமதத்தால் அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு வெறும் கையுடன் திரும்பியது.  டொமினிகாவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் சோக்சி தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று இதில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், அவருக்கு ஜாமீன் வழங்கினால் நாட்டை விட்டு தப்பிச் சென்று விடுவார் என்று டொமினிகா அரசு வழக்கறிஞர்கள் கூறிய கருத்தை ஏற்ற நீதிபதி, சோக்சியின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, சோக்சி மேல்முறையீடு செய்துள்ளார்.

Related Stories: