அடுத்த பனிப்போர் ஆரம்பம் சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் பைடன் அதிரடி

கார்பிஸ் பே: அமெரிக்காவின் ஆதிக்கத்தை உடைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா உடனான பனிப்போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற பிறகு, அதற்கு உலகளவில் வேறு நாடுகளும் போட்டியாக இல்லாத நிலை உருவானது. ஆனால், தற்போது சீனா அதற்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது. கடந்த முறை அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடனும் சீனாவுக்கு எதிரான மோதலை தீவிரப்படுத்தி இருக்கிறார்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பைடன் கடந்த புதன்கிழமை தனது முதல் வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார். முதலில் தனது நெருங்கிய நட்பு நாடான பிரிட்டனுக்கு சென்ற அவர், இந்நாட்டில் உள்ள கர்ன்வாலில் நேற்று தொடங்கிய ஜி-7  மாநாட்டில் பங்கேற்றார்.

இதில், பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.  இதில், ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளின் தலைவர்களுக்கும் சீனாவுடன் பொருளாதார ரீதியாக போட்டியிடுவதற்கும், முக்கிய பிரச்னைகள் குறித்து சீனாவுக்கு எதிராக குரல் கொடுக்கவும் பைடன் பகிரங்க அழைப்பு விடுத்தார். குறிப்பாக, உய்குர் முஸ்லிம்களை் குறிவைத்து சீனா கொண்டு வந்துள்ள கட்டாய தொழிலாளர் நடைமுறை சட்டம், கொரோனா வைரசை பரப்பியது, அண்டை நாடுகளுடான மோதல் உட்பட பல்வேறு பிரச்னைகளில் அந்நாட்டுக்கு எதிராக உலக தலைவர்கள்  ஒரே குரலில் பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், சில ஐரோப்பிய நட்பு நாடுகள் சீனாவுடன் மோதுவதற்கு தயங்குகின்றன.

Related Stories: