கொரோனா ஊரடங்கால் கடந்த மே மாதத்தில் வாகன சில்லறை விற்பனை 55% சரிவு

டெல்லி : கொரோனா ஊரடங்கால் கடந்த மே மாதத்தில் வாகன சில்லறை விற்பனை 55% சரிவு அடைந்துள்ளது. கொரோனா 2வது அலையால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் வாகன விற்பனை சரிவு அடைய தொடங்கியது. இந்த நிலையில் பயணியர் வாகன சில்லறை விற்பனை ஏப்ரல் மாதத்தை காட்டிலும் மே மாதத்தில் 55%சரிவு அடைந்துள்ளதாக அகில இந்திய வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் இரு சக்கர வாகன விற்பனை 53%மும் 3 சக்கர வாகன விற்பனை 76%மும் சரிவு அடைந்துள்ளது. அதே போல் பயணிகள் வாகன விற்பனை 59%, டிராக்டர் விற்பனை 57%மும் வர்த்தக வாகனங்களின் விற்பனை 66% சரிவு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்களிலும் கொரோனா பரவிய காரணத்தால் டிராக்டர்கள் விற்பனை சரிவு அடைந்ததாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் 11 லட்சத்து 85 ஆயிரத்து 374 வாகனங்கள் விற்பனையாகிய நிலையில், மே மாதத்தில் 5,35,855 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. கொரோனா முதல் அலையின் போது, சரிவு அடைய தொடங்கிய வாகன விற்பனை கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் மீண்டும் பழைய நிலையை எட்டியது. இந்த நிலையில் மீண்டும் விற்பனை சரியாய் தொடங்கி உள்ளது வாகன உற்பத்தி நிறுவனங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Related Stories: