வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் பைடன் பதவியேற்ற பிறகு வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி வருகிறார். இந்தியர்களுக்கு அதிகளவில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிறப்பு அதிகாரங்கள் படைத்த பெடரல் நீதிபதியாக, அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நியூ ஜெர்சி மாவட்ட நீதிமன்றத்தின் பெடரல் நீதிபதியாக பாகிஸ்தான் வம்சாவளியான ஜாஹித் குரேஷி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான ஓட்டெடுப்பு செனட் அவையில் நடந்தது. இதில், குரேஷிக்கு ஆதரவாக 81 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் கிடைத்தன. இதன்மூலம், அவருடைய நியமனம் உறுதி செய்யப்பட்டது.
* 100 கோடி தடுப்பூசி வழங்கும் ஜி7 நாடுகள்பணக்கார நாடுகள் கூட்டமைப்பான ஜி7 நாடுகள் கூட்டமைப்பில் ஏழை நாடுகளுக்கு 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா 50 கோடி தடுப்பூசியும், இங்கிலாந்து 10 கோடி தடுப்பூசியும் வழங்குவதாக உறுதி தந்துள்ளன. பிரான்ஸ் 3 கோடி தடுப்பூசி வழங்குகிறது. இதன் விநியோகத்தை ஆகஸ்ட்டில் தொடங்கி, இந்தாண்டு இறுதிக்குள் 20 கோடி தடுப்பூசி விநியோகிக்கப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 30 கோடி டோஸ் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் வழங்கப்பட்டு விடும் என்றும் அவர் கூறி உள்ளார். 100 கோடியில் 80 சதவீத தடுப்பூசிகள், உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது.