லட்சத்தீவு குறித்து சர்ச்சை பேச்சு நடிகை மீது தேச துரோக வழக்கு

கவரத்தி: லட்சத்தீவு மற்றும் மத்திய அரசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசதுரோக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக லட்சத்தீவை சேர்ந்த திரைப்பட நடிகையும், இயக்குநருமான ஆயிஷா சுல்தானா அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அந்த விவாதத்தில் பேசிய சில பகுதிகளை குறிப்பிட்டு, பாஜ பிரமுகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் லட்சத்தீவு காவல்துறை நடிகை மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், செட்லாட் தீவைச் சேர்ந்த ஆயிஷா சுல்தானா மீது 124 ஏ (தேசத்துரோகம்) மற்றும் 153 பி (வெறுப்பு பேச்சு) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜவின் லட்சத்தீவு பிரிவு தலைவர் அப்துல் காதர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நடிகை பேசிய வீடியோ பதிவில், ‘லட்சத்தீவு மக்களின் மீது மத்திய அரசு கொரோனாவை உயிர் ஆயுதமாக பயன்படுத்துகிறது’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் வழக்குபதிந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

Related Stories: