கார் ஷோரூம் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர், முன்னாள் நிர்வாகி உள்பட 4 பேர் கைது

திருச்சி: திருச்சியை அடுத்த திருவெறும்பூர் சுருளி கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத். இவரது தந்தையுடன் சேர்ந்து திருச்சி கே.கே.நகர் பகுதியில் சமர் கார்ஸ்பா என்ற பெயரில் காருக்கு வீல் அலைன்மென்ட் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், வினோத் தனது டு விட்டர் பக்கத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை வினோத்தின் கார் நிறுவனத்துக்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் துரைமுருகன், மாவட்ட செயலாளர் மற்றும் திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வினோத், நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ் குமார், உள்ளிட்ட 10 பேர், எதற்காக விமர்சனம் செய்தாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் அவரை மிரட்டியதோடு, பிரபாகரன் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் பிரபாகரன் பற்றி பேசமாட்டேன் என்று கூற வைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அதன்படி, வினோத், வீடியோவை அவரது டு விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து விட்டு சிறிது நேரத்தில் நீக்கி விட்டார். இது தொடர்பாக வினோத், கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கே.கே.நகர் போலீசார் 143, 147, 293 (பி), 447, மற்றும் 506 ஆகிய 5 பிரிவின்கீழ் வழக்கு பதிந்து சாட்டை துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.

Related Stories: