திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலமாக நடந்த தங்கம் கடத்தல் தொடர்பாக, இந்த தூதரகத்தில் பணிபுரிந்து வந்த சொப்னா, சரித்குமார், ரமீஸ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, மத்திய சுங்க இலாகா ஆகியவை விசாரித்து வருகின்றன. விசாரணையில், கைது செய்யப்பட்ட ரமீஸ் துபாயில் இருந்து தங்கத்தை வாங்கி அமீரக தூதரக பார்சலில் திருவனந்தபுரத்திற்கு அனுப்பியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது முக்கிய கூட்டாளியான மலப்புரத்தை சேர்ந்த முகமது மன்சூர், தங்கம் கடத்தலுக்கு உதவிகள் செய்தது தெரியவந்தது. இவர் தங்கத்தை உருக்கி எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்குள் மறைத்து வைப்பதில் கைதேர்ந்தவர். இவர் பலமுறை தங்கத்தை மறைத்து கடத்துவதற்கு உதவி செய்து வந்துள்ளார்.