கேரளா தங்கம் கடத்தல் வழக்கு முக்கிய குற்றவாளியை கைது செய்தது என்ஐஏ: இன்டர்போல் பிடித்து அனுப்பியது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலமாக நடந்த தங்கம் கடத்தல் தொடர்பாக, இந்த தூதரகத்தில் பணிபுரிந்து வந்த சொப்னா, சரித்குமார், ரமீஸ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, மத்திய சுங்க இலாகா ஆகியவை விசாரித்து வருகின்றன. விசாரணையில், கைது செய்யப்பட்ட ரமீஸ் துபாயில் இருந்து தங்கத்தை வாங்கி அமீரக தூதரக பார்சலில் திருவனந்தபுரத்திற்கு அனுப்பியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது முக்கிய கூட்டாளியான மலப்புரத்தை சேர்ந்த முகமது மன்சூர், தங்கம் கடத்தலுக்கு  உதவிகள் செய்தது தெரியவந்தது. இவர் தங்கத்தை உருக்கி எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்குள் மறைத்து வைப்பதில் கைதேர்ந்தவர். இவர் பலமுறை தங்கத்தை மறைத்து கடத்துவதற்கு உதவி செய்து வந்துள்ளார்.

இவரையும் என்ஐஏ தேடி வந்தது. துபாயில் இருந்ததால் அவரை கைது செய்ய முடியாத நிலை இருந்தது.  இது குறித்து இன்டர்போல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்டர்போல் போலீசார் விசாரணை நடத்தி துபாயில் அவரை பிடித்தனர். அங்கிருந்து நேற்று முன்தினம் அவரை விமானத்தில் கொச்சிக்கு அனுப்பி வைத்தனர். கொச்சி விமான நிலையத்தில் என்ஐஏ அதிகாரிகள் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14ம் தேதி வரை காவலில் வைத்து நீதிமன்றம்அனுமதி அளித்ததால் அவரை அழைத்து சென்றனர்.

Related Stories: