×

ஐ.சி.சி.யின் முதல் பெண் நடுவர்!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய காலக்கட்டத்தில் எல்லா விளையாட்டிலும் பெண்கள் பங்கேற்று இருந்தாலும் பெரும்பாலும் ஆண்களே பெண்களுக்கான விளையாட்டிலும் நடுவர்களாக, பயிற்சியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியப் பெண் ஒருவர் நடுவராக தேர்வாகி இருக்கிறார் என்பது நமக்கு பெருமையான விஷயம்தானே.

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் 1968-ம் ஆண்டு பிறந்த லட்சுமி என்ற (லக்‌ஷா) வலதுகை வேகப்பந்து வீச்சாளராகவும் கிரிக்கெட் வீராங்கனையாகவும் முதல் பெண் போட்டி நடுவராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஆந்திரா, பீகார் மற்றும் ரயில்வே மகளிர் கிரிக்கெட் அணியில் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தவர்.

படிப்பு பெரிய அளவில் கைகொடுக்காத போது, கிரிக்கெட் லட்சுமிக்கு வாழ்வில் உயர வழிவகுத்துள்ளது. லட்சுமி திருமணத்திற்குப் பிறகும் கிரிக்கெட் மீதிருந்த ஈடுபாட்டால் பல்வேறு அணிகளுடன்  விளையாடி தனக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் அவரால் பெரிய அளவில் புகழ்பெற முடியவில்லை.

லட்சுமி ரயில்வே துறையில் வேலைப் பார்த்து வந்தாலும் ரயில்வே அணிக்காக பல போட்டியில் பங்கு பெற்றுள்ளார். தற்ேபாது, லட்சுமி தெற்கு ரயில்வே கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, பல இளம் பெண்களை கிரிக்கெட் அணியில் சேர வழிகாட்டியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த போது, இந்திய கிரிக்கெட் வாரியம் 2008ல் அறிவித்த 5 பெண் நடுவர்கள் அடங்கிய குழுவில் அங்கம் வகித்தார். இதன் மூலம் கிரிக்கெட்டில் தனது  அடுத்தபடியான கட்டத்திற்கு சென்றார்.

2014 முதல் 2019ம் ஆண்டு வரை நடுவர்களுக்கு என முதல் முறையாக பி.சி.சி.ஐ நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று உள்நாட்டுப் போட்டிகளுக்கு நடுவராக தேர்வானார். லட்சுமி சர்வதேச அளவில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளிலும், சர்வதேச டி-20 போட்டிகளிலும் நடுவராக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச ேபாட்டிகளில் நடுவராக தேர்வான லட்சுமிக்குஉலகக் கோப்பை போட்டிகளிலும் நடுவராக பணியாற்ற விருப்பம் உண்டாம்.

லட்சுமி முதல் தர போட்டிகளில் நடுவராக செயல்பட்டு வரும் நிலையில் அவரை போட்டி நடுவராக ஐ.சி.சி. அறிவித்திருக்கிறது. ‘‘முதல் பெண் போட்டி நடுவராக அறிவிக்கப்பட்டது எனக்கு பெருமை அளிக்கிறது. எனக்கு கொடுத்த இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி செயல்படுவேன்’’ என்று தெரிவித்துள்ளார். லட்சுமி பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக ஐ.சி.சி நடுவர் குழுவில் அங்கம் வகிக்கும் மூத்த அதிகாரியானஅர்ஜூன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

லட்சுமியின் இந்த சாதனை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி ஓமன் - நபிமியா ஆண்கள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் லட்சுமி போட்டி நடுவராக பணியாற்றினார். இதன் மூலம் ஐ.சி.சி.யின் முதல் பெண் போட்டி நடுவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் சேர்த்து இந்தக் குழுவில் 8 பெண் நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

‘‘கல்லூரியில் கிரிக்கெட் பயிற்சியாளர் என்னை அழைத்து விளையாடச் சொன்னார். நான் பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தேன். எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். இப்படித்தான் நான் கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டேன். கல்லூரி நாட்களில் பல கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளேன்.

படிப்பு முடித்த கையோடு தெற்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. ரயில்வே கிரிக்கெட் அணிக்காக 2004 வரை இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். தெற்கு மத்திய அணியில் இடம் பெற்ற நான்,மேற்கு ரயில்வே அணியினை எங்களின் அபார ஆட்டத்தின் மூலம் தோல்வி அடைய வைத்து வெற்றிக் கோப்பையை கைப்பற்றினோம்’’ என்றார் பெருமிதத்துடன் லட்சுமி.

ஆர்.சந்திரசேகர்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!