தேர்வு முடிவுகள் புகார்களை தொடர்ந்து இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் மறுதேர்வு: வழக்கமான முறையில் தேர்வு...அண்ணா பல்கலை முடிவு

சென்னை: கொரோனா நோய்த் தொற்று 2ம் அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் பிப்ரவரி மாதம் 3, 5 மற்றும் 7வது செமஸ்டர் தேர்வு  நடந்தது.  ஆன்லைன் தேர்வு எழுதிய 4.25 லட்சம் மாணவர்களில், 2.3 லட்சம்  மாணவர்களின் முடிவுகளை மட்டுமே அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. முறைகேடுகளில்  ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்களின் முடிவுகள்  நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரம் தெரிவித்தது.

மேலும் தேர்வு முடிவுகள் வெளிவந்த  2.3 லட்சம் மாணவர்களில், 1.1 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் மோசமான தேர்வு முடிவுகள் பற்றிய புகார்களை தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் ஆன்லைன் தேர்வு எழுதிய  மாணவர்களுக்கு மறு தேர்வுகளை நடத்துமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் ஆன்லைனில் மறு தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய முறையில் நடத்தப்படும் இந்த மறு தேர்வு குறித்து விளக்க, இணைப்பு கல்லூரிகளின்  முதல்வர்களோடு  அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட இணைப்பு கல்லூரியின் முதல்வர் கூறியதாவது:கடந்த பிப்ரவரி மாதம் 3, 5 மற்றும் 7வது செமஸ்டர் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்கள், ஆன்லைனில் நடத்தப்படும் இந்த மறு  தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.  மேலும் விருப்பமுள்ள மாணவர்கள் தேர்வு எழுதலாம். பேனா மற்றும் காகித முறையில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.

அதிகபட்சம் 30 பக்கங்களுக்கு பதில் எழுத வேண்டும். மேலும் பழைய வினாத்தாள் முறையே பின்பற்றப்படும். 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 3 மணிநேரம் ஆன்லைன் தேர்வு நடைபெறும்.  தேர்வுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக அந்தந்த கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்படும். தேர்வுக்குப் பிறகு, மாணவர்கள் ஸ்கேன் செய்த விடைத்தாள்கள் மற்றும் அசல் விடைத்தாள்களை தங்களுடைய கல்லூரியின் வலைதளத்தில்  பதிவேற்ற வேண்டும்.

Related Stories: