வெடிகுண்டு தயாரித்து யூடியூப்பில் பதிவேற்றம்: குடந்தை சிறுவர்கள் 2 பேர் கைது

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபத்தை சேர்ந்த 17 வயது சிறுவனும், சாக்கோட்டையை சேர்ந்த 17வயது சிறுவனும் கடந்த 13ம்தேதி வீட்டில் இருந்த தீபாவளி பட்டாசுகளை எடுத்து அதில்  இருந்த மருந்துகளை தனியாக பிரித்து எடுத்தனர். பின்னர் சணல், காகிதங்கள், கருங்கல் தூள்களை பயன்படுத்தி நாட்டு வெடிகுண்டு தயாரித்தனர். அந்த நாட்டு வெடிகுண்டை சாக்கோட்டை அருகே அய்யாவாடி சாலையில் 2 இடங்களில்  வெடிக்க செய்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவிட்டனர். அந்த நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்தில் சாலையும் சேதம் அடைந்து இருந்தது. இந்த வீடியோ யூடியூப்பில் நேற்றுமுன்தினம் வைரலாக பரவியது.

இந்த வீடியோவை பாரத்த நாச்சியார்கோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வெடி மருந்து, திரி உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 சிறுவர்களையும் கைது செய்தனர்.  இந்த  சிறுவர்களுக்கும், வேறு ஏதாவது சமூக விரோத கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர். கைதான கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்த 17வயது சிறுவன் ஏற்கனவே குற்ற வழக்கில் கைதாகி சிறுவர் சீர்திருத்த  பள்ளியில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: