புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டது. அதில், தொடர்ந்து 2வது நாளாக தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை சரிந்து வருவது சற்று ஆறுதல் அளித்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996 ஆகும். ஆனால் பலி எண்ணிக்கை தொடர்ந்து பீதிக்குள்ளாக்கி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,329 பேர் பலியாகி உள்ளனர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 180 பேர் பலியாகின்றனர். இதன் மூலம் மொத்த பலி 2 லட்சத்து 78 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 33 லட்சத்து 53 ஆயிரத்து 765 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், வீட்டு தனிமையிலும் இருந்து வருகின்றனர்.