கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம்!: ஒடிசா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

புவனேஷ்வர்: ஒடிசாவில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும் கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியை சுகாதார பணியாளர்கள் 3 மாதங்கள் மேற்கொள்வார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர் விளக்கினார். 

கொரோனாவால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வியும், கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும் என்று நவீன் பட்நாயக் அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கலாம் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு உயிரையும் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதாகவும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளார். 

இதனிடையே கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் பெயரில் 10 லட்சம் ரூபாய் வங்கியில் வைப்பு தொகையாக செலுத்தப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். வைப்பு தொகைக்காக வட்டி தொகை குழந்தையையோ, அவர்களின் பாதுகாவலர்களையோ சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்படுவதற்கான அறிவிப்புகளை மத்தியப்பிரதேசம் மற்றும் டெல்லி முதலமைச்சர்களும் ஏற்கனவே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: