மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!: மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்..!!

சேலம்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் அனல் மின் நிலையமும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு பிரிவும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலமாக சுமார் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்நிலையில், இன்று அதிகாலை முதல் பிரிவில் உள்ள கன்வேயர் பெல்ட் பகுதியில் உராய்வு காரணமாக தீ பற்றியது. 

சிறிது நேரத்தில் தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த வந்த மேட்டூர் அனல் மின் நிலைய தீயணைப்பு படையினரும், ஊழியர்களும் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக உலைகளுக்கு செல்லும் நிலக்கரி தடைப்பட்டதால் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்டதால் முதல் பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து முழுமையான ஆய்வுக்கு பிறகு சேதத்தின் முழு விவரம் தெரியவரும். கடந்த 2012ம் ஆண்டு இதேபோன்று அனல் மின் நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: