காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம்; மீறினால் கடும் நடவடிக்கை: சென்னை காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம் என காவல்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் சரகத்திலிருந்து மறுகாவல் எல்லைக்குள் செல்ல இ-பதிவு கட்டாயம் என கூறியுள்ளது. இ-பதிவு செய்யாதவர்கள் மற்றொரு செக்டர் பகுதியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளது.  

தமிழக அரசின் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் ஏற்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவின்பேரில் செவ்வாய்க்கிழமை முதல் முறையான பொது முடக்கப் பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலைய சரகங்களில் உரிய சாலை தடுப்புகள் அமைத்து செக்டாா்களாக ஏற்படுத்தி அப்பகுதியிலேயே வசிக்கும் மக்கள் அவா்களுக்கு வேண்டிய காய்கறி, உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் அறிவுரைப்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மேற்படி அத்தியாவசிய பொருள்கள் வாங்க அனுமதிக்கப்படுவா். 

சென்னை பெருநகரில் அனைத்து காவல் நிலைய சரகங்களையும் ஒருங்கிணைத்து முக்கிய சந்திப்புகள், சரக எல்லைகள் என 153 வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் குழுவினா் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அரசால் அனுமதிக்கப்பட்ட  நேரத்தை மீறி வெளியே வருபவா்கள் உரிய இ-விண்ணப்பம் பதிவு செய்து அனுமதி பதிவு பெற்றிருக்க வேண்டும். இ- பதிவு செய்யாமல் வெளியே வருபவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. அவசர மருத்துவ சிகிச்சை, மற்றும் தவிா்க்க முடியாத தேவைகளைத் தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்கும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: