சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 5 நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தால் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்பதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதையடுத்து சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையில் தினசரி பாதிப்பு கடந்த 7 ஆயிரத்தை கடந்து இருந்தது. கடந்த 10ம் தேதி 7,149 பேரும், 11ம் தேதி 7,466 பேரும், 12ம் தேதி 7,500 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள். ஆனால் 13ம் தேதியில் இருந்து தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.