பொது இடங்களில் நீராவி பிடிக்கக் கூடாது: கொரோனா தொற்று பரவி நுரையீரல் பாதிப்பு ஏற்படும்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

சென்னை: பொது இடங்களில் வைத்து நீராவி பிடிக்க கூடாது. இந்த செயல்பாடு மூலம்  தொற்று பாதித்த ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு சுலபமாக பரவி உடனடியாக நுரையீரல் பாதிப்பு வர வாய்ப்பு இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, லயோலா கல்லூரியில் 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ டாக்டர் எழிலன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறையும், சென்னை மாநகராட்சியும் ஒருங்கிணைந்து, சென்னை லயோலா கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது மனநிறைவைத்தருகிறது. 3 நாட்களுக்கு முன்பு வரை 7 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று, அதன்பிறகு 500 என்ற எண்ணிக்கையில் குறைந்து வருகிறது.

முதல்வரின் உத்தரவுப்படி சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 995 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கமிஷனரின் முயற்சியினால் 595 ஆக்சிஜன் செறிவூட்டிகள் (கான்சன்ட்ரேட்டர்) வர இருக்கிறது.சென்னையில் கடந்த ஒரு வாரமாக 11 ஆயிரத்து 800 களப்பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று பரிசோதனை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதன்முறையாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமையில் இருப்பவர்களை, நேரடியாக அவர்களது வீடுகளுக்கே சென்று, மருத்துவ ஆலோசனை வழங்கி சிகிச்சை அளிக்க 15 மண்டலங்களுக்கு 300 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இது பெரிய அளவிலான பலனை தரும். கொரோனா பராமரிப்பு மையங்கள் இருக்கின்றன. இங்கு 6,982 படுக்கைகள் உள்ளன. அதில் 2,686 படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. 4,296 படுக்கைகள் காலியாக உள்ளன. தமிழகத்தில் 77 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொண்டோம் என்ற நிலையை மக்கள் கொண்டு வர வேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு. இன்னும் 5 மாதத்துக்குள் ஒட்டு மொத்த பேரும் தடுப்பூசியை போட்டுக்கொண்டோம் என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும்.

பொது இடங்களில் நீராவி பிடிக்க கூடாது. பொது இடத்தில் நீராவி பிடித்தால், தொற்று பாதித்த ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு சுலபமாக பரவி உடனடியாக நுரையீரல் பாதிப்பு வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் அந்த நீராவி புகையால், சுவாசிப்பவரின் நுரையீரலும் பாதிக்கும். யாராக இருந்தாலும் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் டாக்டர்களின் ஆலோசனை படி நடக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

நோய் பரவல் தடுப்பு மையம்

சென்னை, லயோலா கல்லூரி வளாகத்தில் 100 படுக்கை வசதிகள் கொண்ட நோய் பரவல் தடுப்பு மையம் நேற்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையத்திற்க்கென பிரத்யேக தொலைபேசி எண் 9025452222 கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: