மதுரை: அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் சுமார் 1,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் லாரி, இரவு 10 மணி கடந்தும் வரவில்லை. இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு மையத்திற்கு உடனடியாக சென்று அங்கிருந்து ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தார். அத்தோடு மட்டுமல்லாமல், இரவில் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றவர், ஆக்சிஜன் நிரப்பிய பிறகே, நேற்று அதிகாலை 2 மணி வரையிலும் காத்திருந்து பின்னர் கிளம்பி சென்றார். மதுரை எம்பி சு.வெங்கடேசனும் அதுவரை உடனிருந்து பணிகளை பார்வையிட்டார். அமைச்சர் மூர்த்தி, எம்பி வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் காத்திருந்து களப்பணியாற்றிய இந்நிகழ்வு பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.