×

பொதுமக்கள், மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முகநூல்கள், சமூக வலைதளங்களில் வரும் புகை போடுதலை சுயமாக செய்ய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முக நூல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக் கொள்ள கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் உத்தரவின்படி மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நெறிமுறைகளின் படி கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும். பொது மக்கள் தாங்களாகவே சுயவைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் தவறாகும். அவ்வாறான சிகிச்சை முறைகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அழுத்தமான காற்று புகை போடுதல் என்ற ஒன்று தற்போது பொது மக்களிடையே பரவி வருகிறது. இந்த புகை போடுதல் மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று அவர்களின் நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதுமட்டுமல்லாமல் அவர்கள் வாயை திறந்து புகையை பிடிக்கும் போது வைரஸ் கிருமியானது அருகில் உள்ளவர்களுக்கு மிக வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இது மருத்துவ நெறிமுறைகளின் படி இதனை மருத்துவ சிகிச்சையாக கருத முடியாது. நோய் தொற்று ஏற்பட்டவுடன் பொதுமக்கள் தாங்களாகவே வீட்டுமுறை வைத்தியம் செய்வதை விட்டு மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் கோவிட் நோயாளிகளுக்காக சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த கோவிட் வைரஸ் என்பது புதுமையான நோயாகவும் இது நேரடியாக நுரையீரலை பாதிக்கும் தன்மை உடையதாக இருப்பதாலும் மருத்துவருடைய அறிவுரை இல்லாமல் புகை போடுதல் என்பதை பயன்படுத்தக் கூடாது.

சித்தா கோவிட் கேர் மையத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ முறையானது மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மாநில அரசு மருத்துவ குழு ஒன்று அமைத்து அதன் வழிகாட்டுதலின்படி உள்மருந்து மற்றும் பிற மருத்துவ முறைகளை கூறியுள்ளது. எனவே, பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முக நூல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக் கொள்ள கூடாது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Ma Subramaniam , Public, do not smoke on Facebook and social networking sites without doctor's advice: Minister Ma Subramaniam
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...