புதுடெல்லி: இஸ்ரேல் -காசா போர் முனையில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 8 நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் நிரந்தர பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி கலந்து கொண்டார். இஸ்ரேலில் பொதுமக்களை குறிவைத்து காசாவில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமாக ராக்கெட், துப்பாக்கி சூட்டுக்கு இந்தியா சார்பில் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். ஹமாஸ் செயல்பாட்டுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடி என்ற வார்த்தையை இந்தியா பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு இந்தியாவே பலியாகி இருப்பதால் வார்த்தைகள் கவனமாக கையாளப்பட்டுள்ளது.