சென்னை: கொரோனா பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன் 10 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், அதை எதிர்கொள்ள தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள, முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து, முதல்வர் நிவாரண நிதியாக 10 கோடி ரூபாயை சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன் வழங்கினார். சன் டிவி குழுமம் சார்பில் நிவாரண நிதி வழங்கியபோது துர்கா ஸ்டாலின், காவேரி கலாநிதி மாறன் ஆகியோரும் உடனிருந்தனர்.